இறக்கைகள் முளைக்குதே.. இமயம் கடக்குதே..
பெண்: இருவிழி பசிக்குதே.. இமைவழி புசிக்குதே..
இடைவெளி குறையுதே.. இலகுவாகுதே..ஆண்: காந்தள் பூப் போல வந்து - நீ
காதல் நரம்புகளை மீட்ட
பெண்: அணுவின் நேர்மின்னி யாவும் - உன்
பெயரையே எழுதிக் காட்ட
ஆண்: இது தான் காதல் என்பதா..
இளமை இனிமை ஆனதா..
இரவும் பகலும் மாறுதா..
இசைகிறதா..
சரணம் 1
ஆண்: கோடி மின்னல் பார்வை ஒன்றில் பாய
கோபுரங்கள் உன் சிரிப்பில் சாய
கன்னி பூச்செடி.. நீ கூதல் காற்றடி..
பெண்: மாய வலைகள் என்னைச் சுற்றி வேய
மனது முழுதும் உன்னைப் பற்றி ஆய
என்னை கைப்பிடி.. பின் நானுன் சேவடி..
ஆண்: கோலார் சுரங்கம் ஒன்று கோதை ஆனதென்ன
பாலார் படுகை போலே மனம் பாழாய் போனதென்ன
பெண்: புன்னகை பூவிதழ் உன் புத்தகம் ஆனதோ
ஆண்: பக்கங்கள் புரட்டினால் புது சொர்க்கங்கள் சேருமோ
சரணம் 2
ஆண்: வானவில்லில் கருமை வண்ணம் எங்கே
வஞ்சிப் பெண்ணில் புருவம் ஆனதிங்கே
மின்னல் கூர் விழி.. எனை ஈர்க்கும் கருங்குழி..
பெண்: தேகம் எங்கும் தீண்டும் தென்றல் எங்கே
தேடி மேயும் கைகள் ஆனதிங்கே
பேசும் மார்கழி.. நீ காதல் பெருவழி..
ஆண்: கடலில் சேரும் நதியாய் காலம் போனதன்று
தரிசாய் கிடந்த யாவும் தளிராய் மாறுதின்று
பெண்: மழையாய் மாறவா.. உன் புஞ்சை தூரவா..
ஆண்: பிழைகள் தீர்க்கவா.. எனை முழுதாய் ஆக்கவா..
"ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்" திரைப்படத்துக்காக, மெட்டுக்கு எழுதிய பாட்டு.

